மழைகளின் இளவரசியான உதகையில் அதிகப்படியான தேயிலை உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் தேயிலைகள் இந்தியா முழுக்க மற்றுமின்றி உலகத்தின் பெரும்பகுதிக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியினால் நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் மொத்த தேயிலையும், குறிப்பாக உற்பத்தி நிறுவனங்களில் மட்டும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட கிலோ தேயிலை பயனற்ற நிலையில் தேங்கிக் கிடக்கின்றன.

தற்போது நீலகிரியில் தேங்கிக் கிடக்கும் தேயிலைகளின் மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய் இருக்கும் என நீலகிரி தேயிலை உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்குக் காரணம் ஜூலை 1ம் தேதியன்று உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டி வரியே என இச்சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேயிலை உற்பத்தியாளர் சங்க உறுப்பினர் கூறுகையில், நீலகிரியில் குறிப்பாக குன்னூர் பகுதியிலேயே தேயிலை விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இத்தொழிலை நம்பி ஏராளமான இடைத்தரகர்கள் உள்ளனர். இவர்களுக்கு தேயிலை ஏற்றுமதியின் போது குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைக்கும். ஆனால், தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியினால் இடைத்தரகர்களுக்கு எதன் அடிப்படையில் கமிஷன் தொகை தருவது என குழப்பம் நீடித்து வருகிறது.

இவ்வாறு உதகையில் தேயிலைத் தொழிலை நம்பியுள்ள அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஜூலை 21ம் தேதி முதல் தேயிலைச் செடியில் இருந்து புதிதாக தேயிலை பறிக்கும் பணி நிறுத்தி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனையில் அரசு நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விரைவில் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் இத்தொழிலை நம்பியுள்ள நீலகிரி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என தேயிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.