நடிகர் கமலஹாசன் ஆதாரம் இல்லாமல் அரசை விமர்சனம் செய்து வந்தால், அடுத்த கட்டமாக தமிழக அரசு சார்பில் வழக்கு பதிவு செய்யப்படுமென ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை, மேட்டுப்பாளையம் அருகே கல்லார் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை இன்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று பார்வையிட்டு மருத்துவர்களிடம் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நடிகர் கமலஹாசனின் தமிழக அரசு குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்த அவர், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தமிழக அரசு மற்றும் முதலமைச்சர் குறித்து நடிகர் கமலஹாசன் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து நடிகர் கமலஹாசன் ஆதாரம் இல்லாமல் அரசை விமர்சனம் செய்து வந்தால், அடுத்த கட்டமாக அவர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு பதிவு செய்யப்படுமெனவும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுனன், எட்டிமடை எ.சண்முகம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சௌந்தரவேல், வருவாய் கோட்டாட்சியர் கோவை (வடக்கு) சின்னசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.