கோவையில் தனியார் வங்கி ஏடிஎம்-ல் 2000ரூபாய் நோட்டுக்கு பதிலாக 20 ரூபாய் நோட்டு வந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செளரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று மாலை காளிதாஸ் தனது மருத்துவ செலவுக்காக சவுரிபாளையம் பகுதியில் இருக்கும் ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்கச்சென்றார்.
50 ஆயிரம் ரூபாயை 5 தவணைகளாக எடுக்க முயற்சித்த அவர் 10ஆயிரம் ரூபாயாக எடுத்தார். ஒவ்வொரு முறையும் நான்கு 2000ம் ரூபாய் நோட்டுகளும் ஒரு 20 ரூபாய் நோட்டும் வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் புகார் அளித்தார். நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வராததால் மனமுடைந்த அவர் மருத்துவ செலவுக்கு அவசரமாக தேவைப்படும் பணம் கிடைக்க தாமதமானதற்கு வங்கி அதிகாரிகள் உரிய பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
வங்கி ஏடிஎம்-ல் 2000-ம் ரூபாய் நோட்டுக்கு பதிலாக 20 ரூபாய் நோட்டு வந்தது வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.