பொதுவாக ஒரு செயலை செய்து முடிப்பதில் ஒருவர் மெத்தனம் காட்டினால் அது அவருக்கே பாதிப்பை உண்டாக்கும். ஆனால், மக்கள் பாதுகாப்பையும், மகிழ்ச்சியையும் பாதிக்கும் காரணிகளை சரிசெய்வதில் மெத்தனம் காட்டுகையில் ஒரு சமுதாயமே பாதிப்புக்குள்ளாகும் அவலம் ஏற்படும். அந்த செயலை தான் தற்போது கோவை மாநகராட்சி அதிகாரிகள் செய்துவருகின்றனர்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா உள்ளது. ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வரும் பொதுமக்கள் பலரும் சற்று நேரம் ஓய்வெடுக்கவும், குழந்தைகளை விளையாட வைப்பதற்கும் இந்த பூங்காவை நாடுகின்றனர். இதனால் மாலை நேரங்களில் இந்த பூங்காவில் பொது மக்கள் அதிக அளவில் காணப்படுவர்.

ஆனால், இப்பூங்காவில் மின்விளக்கு எரியாமலும், சரியான பராமரிப்பு இல்லாமலும் உள்ளது. பூங்காவில் மின் விளக்கு வசதி இல்லாததால் மாலை நேரத்தில் அங்கு விளையாட வரும் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாக கடந்த வாரம் நமது சிம்ப்ளிசிட்டி-யில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தி பல்வேறு விதங்களாக சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வாயிலாக அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இருப்பினும் அரசு அதிகாரிகளின் செயல்பாடு ஆமை வேகத்தில் உள்ளதாக பொதுமக்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கோவையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இப்பூங்கா அரசு உயர் அதிகாரிகள் வீடுகளின் அருகாமையிலேயே அமைந்துள்ளது. இருந்த போதும் கேட்பாரின்றி கிடக்கிறது.

பூங்கா திறக்கும் மற்றும் மூடும் நேரம் குறித்து எந்த அறிவிப்பு பலகையும் இப்பகுதியில் வைக்கப்படவில்லை. பெரும்பாலும் பூட்டிக்கிடப்பதால் சிலர் கம்பி வேலிகளை அகற்றிய பின் உள்ளே சென்றுவிடுகின்றனர்.
மின் விளக்கு எரியாமல் கும் இருட்டில் விளையாடும் குழந்தைகள் விஷப்பூச்சிகளால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டுமே மின்விளக்குகள் எரிகிறது. இதனால் இரவு நேரங்களில் இங்கு நடைபயணம் மேற்கொள்ளும் பொதுமக்களும் அச்சத்திற்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் சந்தன மரங்கள் வெட்டுதல், திருட்டு போன்றவற்றை சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பராமரிப்பற்ற இப்பூங்கா தொடர்பாக மத்திய மண்டல உதவிப் பொறியாளரிடம் கேட்டபோது, 'இது குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதற்கு பராமரிப்பாளர்களிடம் பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்வோம்' என்றார்.
பூங்காவை முறையாக பராமரிப்பதோடு, அங்கு கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.