கோவை கிழக்கு மண்டலம் ஒண்டிப்புதூர் 61வது வார்டுக்குட்பட்ட கஸ்தூரி நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 27 சென்ட் ரிசர்வ் சைட் இடத்தில் அப்பகுதிமக்களுக்கு பயன்படும் வகையில் பூங்கா அமைக்க மாநகராட்சி சார்பில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இன்று தன்னார்வலர்கள் அமைப்பின் மூலம் மரம் நடும் விழா நடைபெற்றது. இதனை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார். பின்னர், எஸ்.பி.ஒ.ஏ பள்ளி மாணவர்களின் சுற்றுசூழல் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

இது குறித்து ஓசை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சையத் கூறுகையில்; கோவையில் பல்வேறு இடங்களில் வெட்டப்படவிருக்கும் மரங்கள் பாதுகாக்கப்பட்டு மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திலும், பள்ளி, கல்லூரிகளிலும் மரங்கள் மறுநடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான இதுபோன்ற இடங்களில் தற்போது தன்னார்வலர்கள் இணைந்து 20-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளனர். மேலும், இதுபோன்ற சேவைகளுக்கு கோவை மாநகராட்சி இடங்கள் தந்து உதவ முன்வரவேண்டும். பொதுமக்களும் மரங்கள் வளர்க்க அக்கறை கொள்ளவேண்டும் என்றார்.

இதில், தன்னார்வ அமைப்புகளான ஓசை அமைப்பு, ஃபுட் பேங்க் கோயமுத்தூர், இ.எப்.ஐ கோயமுத்தூர், கோவை வேர்கள் உள்ளிட்ட அமைப்புகள், கஸ்தூரி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கஸ்தூரி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் இப்பூங்கா பராமரிக்கப்படும் என அப்பகுதிமக்கள் தெரிவித்தனர்.
