எதிர்கால தலைமுறை மரங்களை பாடப்புத்தகத்தில் தான் பார்க்கப்போகிறதோ? என்ற அச்சம் சற்றே தணிந்திருக்கிறது நெடுஞ்சாலைத்துறையின் புதிய திட்டத்தால்...! அவினாசி சாலை தொடங்கி, திருச்சி சாலை, பொள்ளாச்சி சாலை மேட்டுப்பாளையம் சாலை என சாலை விரிவாக்கப்பணிகள் தொடங்க, சாலையின் இருபுறமும் இருந்த மரங்கள் வெட்டி வீசப்பட்டன.
‘குழு-குழு’ கோவை இப்படி ‘ஹாட்’-ஆக மாறியதற்கு சாலை விரிவாக்கப்பணிகள் மிக முக்கிய காரணியாக உள்ளது. மக்கள் தொகை மற்றும் வாகன பெருக்கத்தால் சாலை வசதியை மேம்படுத்துவது இன்றியமையாததாகிறது. அப்படி, ஒவ்வொரு சாலையை விரிவுபடுத்தும் போதும், அங்குள்ள மரங்கள் வெட்டி அகற்றப்படுகின்றன. இப்படியாக, வளர்ச்சி என்பது இயற்கையை அழிக்கும் வகையில் சென்று கொண்டிருக்கிறது.
கோவையில் மட்டும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கென 2500-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவை- சத்தி சாலையின் விரிவாக்கப் பணிகளை கையில் எடுத்தது நெடுஞ்சாலைத்துறை. இப்போது எத்தனை மரங்கள் வீழுமோ? என்ற பரிதவித்த இயற்கை ஆர்வலர்கள், நெடுஞ்சாலைத்துறைக்கு புதிய ஆலோசனைகளை வழங்கினர்.
‘விரிவாக்கப் பணிகளுக்காக மரங்களை வெட்டாமல், அதனை மறுநடவு செய்யலாமே’, என்ற யோசனை தான் அது. இம்முறை சத்தி சாலையில் உள்ள பெரும்பாலான மரங்கள் வெட்டப்படாமல் பாதுகாக்கப்படும் என்று மகிழ்ச்சி கொள்கிறார், சுற்றுச்சூழல் ஆர்வலர் ‘ஓசை’ சையத்.
இது குறித்து ‘ஓசை’ சையத் கூறியதாவது:-
கோவை- சத்தி சாலையில் விரிவாக்கப்பணிகள் தொடங்குகிறது. முதற்கட்டமாக அம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் தொடங்கி விசுவாசபுரம் வரையில் 2.5 கி.மீ தொலைவுக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அதிகாரிகள் என்னை தொடர்பு கொண்டு, சாலை ஓரம் இருக்கும் மரங்களில் காப்பாற்றத் தகுந்த மரங்களை கணக்கிட கூறினர். தொடர்ந்து, அதிகாரிகளுடன் அந்த பகுதிக்கு சென்றேன்.

2.5 கி.மீ தொலைவுக்குள் 160 மரங்கள் உள்ளன. அதில் 60 பெரிய மரங்கள் மற்றும் 22 சிறிய மரங்கள் காப்பாற்றப்பட கூடிய மரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதில், வேப்பமரம், அரசமரம், புங்கை, பூவரசு உள்ளிட்ட பல்வேறு வகையான நம் மண்ணின் மரங்கள் அடங்கும். இந்த மரங்களின் மீது, ‘சரி’ (டிக்) குறியீடு வரையப்பட்டுள்ளது. இந்த மரங்களை, அப்பகுதியில் இருக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசின் பொது ஒதுக்கீட்டு நிலங்களின் மறு நடவு செய்ய திட்டமிட்டுள்ளோம். மேலும், அதே பகுதியில் அமைந்துள்ள பூங்கா-வின் ஒரு பகுதியில் மறுநடவு செய்யப்படும் மரங்களைக் கொண்டு மரங்களுக்கான பூங்கா அமைக்க மாநகராட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இயற்கையை காக்க அரசு அதிகாரிகள் தாமாக முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
டெண்டர்
சாலை விரிவாக்க பணிக்கு நெடுஞ்சாலை துறையில் இருந்து டெண்டர் விடப்படுகிறது. அதே போல, சாலையோரம் இருக்கும் மரங்களை அகற்றவும் டெண்டர் விடப்படுகிறது. இப்படி டெண்டர் விடப்படும்போது, அதில் மரங்களை மறு நடவு செய்யும் திட்டத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். நம் சூழலை காக்கும் இந்த பணியை தொடர மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. ‘ஓசை’ சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து இந்த பணியை தொடர விரும்பும் ஆர்வலர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் (8428859911)". இவ்வாறு அவர் கூறினார்.