கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக கலந்தாய்வில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், நீட் தேர்வின் முடிவிற்கு பின் மருத்துவ படிப்பிற்கு சென்று விட்டால் கட் ஆப்பில் அடுத்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு இடம் வழங்கக்கோரி பெற்றோர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இளங்கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று துவங்கியது. இதில் 200 முதல் 197 வரை கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர். முதல் நாளில் 397 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த கலந்தாய்வில் பங்கேற்ற பெரும்பாலான மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், தேர்வு முடிவுகளுக்கு பின்னர் மருத்துவ படிப்பிற்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளுக்கு பின்னர், மருத்துவ படிப்புகளுக்கு சென்றால் காலியாகும் இடங்களுக்கு கட் ஆப்பில் அடுத்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு வழங்கக்கோரி பெற்றோர்கள் பல்கலைகழக டீன் மகிமைராஜா அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை பல்கலைகழக நிர்வாகம் ஏற்க மறுத்ததால் அதிகாரிகளுடன் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு என்பது மாணவர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகவும், அத்தேர்வு முடிவுகளுக்கு பின்னர் வேளாண்மை பல்கலைகழக கலந்தாய்வை நடத்தி இருக்க வேண்டுமென பெற்றோர்கள் தெரிவித்தனர்.
அரசு விதிகளுக்கு உட்பட்டே கலந்தாய்வு நடத்தப்படுவதாகவும், மறு கலந்தாய்வு நடத்த வாய்ப்பில்லை எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது