கோவை அருகே டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க இடம் அளித்தவர் வீட்டின் முன்பு பெண்கள் துடைப்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் அதிகரித்து வருகின்றது. மக்கள் எதிர்ப்பின் காரணமாக புதிதாக கடைகள் அமைக்கப்படாது என மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பிலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர்- மாதப்பூர் சாலையில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் புதன்கிழமை திடீரென அப்பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து கடை முன்பு போராட்டம் மேற்கொண்டனர். இதனையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாதப்பூர் சாலையில் இருந்து துடைப்பத்துடன் டாஸ்மாக் கடை அமைக்க நிலம் கொடுத்த ராமசாமி என்பவரது வீட்டிற்கு ஊர்வலமாகச் சென்று அவரது வீட்டின் அருகே கையில் துடைப்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, புதிய டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என பெண்கள் போராடி வரும் நிலையில் நில உரிமையாளர் டாஸ்மாக் கடைக்கு இடம் வழங்கியது வேதனை அளிப்பதாகவும், முதல் கட்டமாக எச்சரிக்கை விடுக்க வந்துள்ளதாகவும் கூறினர். மேலும், இந்த கடை அமைக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருந்ததாகவும், தங்களின் கோரிக்கையை மீறி கடை திறக்கப்பட்டால் போராட்டம் தீவிரமாகும் என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி மற்றும் காவல்துறைனர் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இரவு நேரத்தில் டாஸ்மாக கடை அமைக்க இடம் கொடுத்தவர் வீட்டின் முன்பு துடைப்பத்துடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.