கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்ட பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது கொங்கு குளோபல் ஃபாரம் அமைப்பு. இந்த அமைப்பில் உள்ளோர், மேற்கு தமிழகத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றி வருகின்றனர்.

அதன்படி, இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வனிதா மோகன் மற்றும் மேற்குறிப்பிட்ட 7 மாவட்ட பிரதிநிதிகள் குழு சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரைச் சந்தித்து மேற்கு தமிழக மேலாண்மை குறித்தான குறிப்பாணையினை வழங்கினர்.
அந்த குறிப்பாணையில், கோவையில் கிடப்பில் போடப்பட்டுள்ள விமான விரிவாக்கப் பணிகள் உடனடியாக துவங்க உத்தரவிட வேண்டும். மேலும், கடந்த 2011-ஆம் ஆண்டு கோவை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அதற்குண்டான சரியான வளர்ச்சிப் பணிகள் விமான நிலையத்தில் இல்லை.
கோவையில், வரலாறு காணாத அளவிற்கு தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. விவசாய நிலங்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இப்பிரச்சனை குறித்து தமிழக முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதனைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
இதனைத்தொடர்ந்து, கொங்கு குளோபல் ஃபாரம் சார்பில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதன், போக்குவரத்துத் துறை தலைமைச் செயலாளர் பி.டபில்யு.சி.திராவிடர் உள்ளிட்டோரைச் சந்தித்தும் மேற்கு தமிழகத்தின் வளர்ச்சி குறித்தான குறிப்பாணையை வழங்கினர்.