இந்தியாவில் 5ல் ஒருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே, இந்திய மருத்துவர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கோவையில் நடந்த தேசிய கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. கோவை நவ இந்திய சாலை அருகே உள்ள ரெடிசன் ப்ளு ஓட்டலில் 3வது தேசிய அளவில் நீரழிவு நோய் பற்றிய 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பால முருகன் தலைமை வகித்தார். இதில் இந்தியா முழுவதில் இருந்தும் ஏறத்தாழ 500-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கோவை மருத்துவக்கல்லுரி மருத்துவமனை டீன் டாக்டர் அசோகன், சென்னை மருத்துவக்கல்லூரி மருத்துவரும், அறிவியல் கமிட்டி குழுத்தலைவருமான டாக்டர் தர்மராஜ், கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஐசக் மோசஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக டாக்டர் பாலமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தேசிய அளவில் கோவையில் 3-வது முறையாக சர்க்கரை நோய் (நீரழிவு) தொடர்பான கருத்தரங்கினை நடத்துகிறோம். உலகில் அதிக மக்கள் தொகை உள்ள நாடான, இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளிலும் இந்த நோயின் தாக்கம் அதிகம் உள்ளது. ஒரு கட்டத்தில் சீனாவில் அதிகம் இருந்தால், அடுத்த கட்டத்தில் இந்தியா முன்னணி வகிக்கிறது. தற்போது வீட்டிற்கு வீடு யாராவது ஒருவருக்கு இந்த நோய் உள்ளது. 5ல் ஒருவருக்கு என்ற விகிதத்தில் இந்த நோய் வியாப்பித்து உள்ளது. இதனை கட்டு படுத்த தற்போது புதிய புதிய மருந்துகள், மாத்திரைகள், மற்றும் ஊசிகள் வருகின்றன. இந்த நோய்க்கான அறிவியல் பூர்வமான காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
மேலும், இந்த கருத்தரங்கின் மூலம் சர்க்கரை நோயினை கட்டுப்படுத்த கூடுதல் கவனம் செலுத்த இந்தியா முழுவதும் உள்ள டாக்டர்களை கேட்டுக்கொள்கிறோம். தற்போது இதில் சரியான விழிப்புணர்வு மக்களிடையேயும் இல்லை. இதில் போதிய அளவு அறிவுத்திறன் பெறாத மருத்துவர்களும் சர்க்கரை நோய் பற்றி விளக்கம் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் பலர் குழப்பம் அடைகிறார்கள். எனவே, பொது மக்களும் இதற்கான விழிப்புணர்வினை பெற வேண்டும். இந்த மாநாட்டில் இந்தியா முழுவதில் இருந்தும் அரசு, மற்றும் தனியார்த்துறையைச்சேர்ந்த மருத்துவர்களும் கலந்து கொண்டனர். நோயின் தன்மை குறித்து பொது மக்களுக்கு சரியான விளக்கம் அளிப்பதற்கான பயிற்சியையும் டாக்டர்களுக்கு இந்த கருத்தரங்கு மூலம் விளக்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் அசோகன் கூறியதாவது, சர்க்கரை நோய் உணவு பழக்கம், புதிய மருந்துகள், சரியான உடல்பயிற்சியின்மை, மற்றும் நமது வாழ்க்கை முறையில் மாற்றம் போன்றவற்றால் இந்நோய் வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு துறை மருத்துவர்களுக்கும் போதிய விளக்கம் அளித்து உள்ளோம். இந்த நோயை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள். உணவு பழக்கத்தினாலும், போதிய மருந்து, மாத்திரையினாலும் இந்நோயை கட்டுப்படுத்தலாம். தற்போது இந்த நோய்க்கான புதிய மருத்துவம் வந்து உள்ளது என்றார். பேட்டியின் போது டாக்டர் ஐசக் மோசஸ், டாக்டர் தர்மராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.