கோவை சிங்காநல்லூர் பகுதியில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்ட மதுபானக்கடை, சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் இடமாற்றம் செய்யப்பட்டது. இப்பகுதி விவசாய நிலங்கள் நிறைந்த பகுதியாகும்.
இதனால் இப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்தனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து இப்பகுதியில் டாஸ்மாக் கடையினை அமைத்தது.
இந்நிலையில் புதிதாக விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் நடந்த இந்த போராட்டத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் போது, விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் சுற்றுவட்டார விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும், இந்த மதுபானக்கடையினால் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். இந்த டாஸ்மாக் கடையினை மூட நடவடிக்கை எடுக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்த டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, அரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும் டாஸ்மாக் கடை முன்பாக தொடர்ந்து தர்ணா போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.