கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கோவை: கோவை தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள மாதம்பட்டி அருகே நேற்று இரவு வாலிபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராத விதமாக அவரது பைக்கின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வாலிபர் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு, நடுரோட்டில் பல அடி தூரம் உருண்டு விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில், விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சம்பவ இடத்திலிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.
சம்பவத்தை பார்த்த அருகிலிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக ஓடி வந்து, படுகாயமடைந்த வாலிபரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காட்சி அப்பகுதியில் உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பார்ப்போரின் நெஞ்சை பதற வைத்து வருகிறது.
தகவல் அறிந்த பேரூர் காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து, அதனை ஓட்டி வந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்