பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் தாலுகா அரசூர் ஊராட்சிக்குட்பட்ட செங்கோடகவுண்டன்புதூர் மற்றும் முதலிபாளையம் பிரிவு பகுதிகளில், மக்கள் பயன்பாட்டிற்கு உதவாது எனக் கூறப்படும் நடைபாதை மேம்பாலப் பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, பாஜகவினருடன் இணைந்து தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கப்பள்ளி–வாளையார் தேசிய நெடுஞ்சாலை (NH-544) வழியாகச் செல்லும் இந்தப் பகுதியில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்கவும், வாகனங்கள் தடையின்றி இயங்கவும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகனுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டிருந்தன. வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.



பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நீண்டகால கோரிக்கையை புறக்கணித்து, மக்கள் பயன்பாட்டிற்கு பயனளிக்காத இரண்டு இடங்களில் நடைபாதை மேம்பாலப் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை மீண்டும் முன்னெடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

பெரும்பாலானோர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையே பயன்படுத்தி வரும் நிலையில், நடைபாதை மேம்பாலம் தங்களது அன்றாட போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யாது என்றும், அதனாலேயே இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோதே மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து,நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு, நடைபாதை மேம்பாலப் பணிகளை தடுத்து நிறுத்தினர். "மக்கள் பயன்படுத்த முடியாத நடைபாதை மேம்பாலம் வேண்டாம்; வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்லக்கூடிய முறையான மேம்பாலமே வேண்டும்" என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக பாஜக கோவை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜெய்ஹிந்த் ஆர். முருகேசன் மற்றும் பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில் பாஜகவினரும் அங்கு திரண்டனர். தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் இணைந்து தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் நிலவியது.



தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நீலாம்பூர் காவல்துறையினர், மக்களுடன்பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வரும் திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து, காவல்துறையினரின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

திங்கட்கிழமை எடுக்கப்படும் முடிவைத் தொடர்ந்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் சூலூர் மற்றும் அரசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...