கோவை புலியகுளம் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் சேதமடைந்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை புலியகுளம் பகுதியில் காவல் நிலையம் அருகே பஜார் வீதி என்ற இடத்தில் உள்ள ஓட்டு வீடுகளில் இன்று தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், லட்சுமி என்பவரின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தானது, அடுத்தடுத்துள்ள வீடுகளுக்கும் பரவியது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின், அரை மணி நேரத்தில் தீயணைப்புத் துறையினர் தீயினை முழுவதுமாக அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் லட்சுமி, அந்தோனி அம்மாள், சகாயம் ஆகியோரின் வீடுகள் எரிந்து சேதமானது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள தீயணைப்புதுறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருள்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்து விட்டதாகவும், அரசு சார்பில் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.