பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக்கி விட்டு சமூக நீதி பேசுங்கள்..! - எம்எல்ஏ வானதி சீனிவாசன்

சமூக நீதியை ஓரளவுக்குவாவது நடைமுறைப்படுத்த துணை முதல்வராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்குமா? அல்லது உள்துறை, நிதி, வருவாய், தொழில், பொதுப்பணி போன்ற மிக முக்கிய துறைகளின் அமைச்சர்களாக பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை முதல்வர் நியமிப்பாரா.. ? என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.



கோவை: ஏப்ரல் 3-ம் தேதி திமுக நடத்திய, அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூகநீதி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக பேசிய கருத்துக்கு எதிராக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து எம்எல்ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஏப்ரல் 3-ம் தேதி திமுக நடத்திய, அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு மாநாட்டில், பாஜகவை எதிர்த்தால்தான் அரசியல் நடத்த முடியும் என்ற நிலையில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி கட்சி, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம், ஆம் ஆத்மி கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பாரத் ராஷ்ட்ர சமிதி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றய திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சமூக நீதி பற்றி பாடம் நடத்தியிருக்கிறார். "சமூக நீதியை காக்கும் கடமை நமக்கு தான் இருக்கிறது அதனால்தான் இணைந்துள்ளோம். சமூக நீதி கருத்தியலை யார் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துதான், அதன் வெற்றியும் பலனும் இருக்கும்" என, பேசியுள்ளார்.



திமுக தலைவராகவும், தமிழ்நாடு முதலமைச்சராகவும் இருந்த அண்ணா மறைவுக்குப் பிறகு, 1969-ல் முதலமைச்சராகவும், பிறகு திமுக தலைவராகவும் ஆனவர் கருணாநிதி. 2018-ல் கருணாநிதி மறையும் அரை நூற்றாண்டு காலம் அவர் தான் திமுக தலைவர். 49 ஆண்டுகளும் திமுக தலைவர் பதவிக்கு வேறு ஒருவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டதே இல்லை.



திமுகவிலிருந்து நீக்கப்பட்டு, திமுகவையே ஆட்சிக்கு வர விடாமல் செய்த எம்ஜிஆர் கூட, கருணாநிதியின் தலைமையை எதிர்க்கவில்லை. மகன் ஸ்டாலினுக்கு போட்டியிட வந்து விட்டாரே என்பதால்தான் வைகோவும் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

தந்தை கருணாநிதி மறைவுக்கு பிறகு மகன் ஸ்டாலின் திமுக தலைவராகி விட்டார். அரை நூற்றாண்டு கடந்தும் அப்பதவிக்கு பெயரளவில் கூட வேறொருவர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.



முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று சொல்லி ஸ்டாலினும் முதல்வராகி விட்டார். 2019 லோக்சபா தேர்தலுக்கு பிறகு மகன் உதயநிதியை, திடீரென திமுகவின் இளைஞரணி தலைவராக்கி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வைத்து, இப்போது அமைச்சராகவும் ஆகிவிட்டார்.

உதயநிதிக்கு மட்டுமல்ல, அவரது மகன் இன்பநிதிக்கு துணையாக இருப்போம் என, அமைச்சர்களே பேசும் அளவுக்கு ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்குண்டு இருக்கிறது திமுக.

தந்தை, மகன், பேரன் அடுத்து கொள்ளுப்பேரனையும் தயார்படுத்திக் கொண்டு, மற்ற தகுதியானவர்களுக்கு கிடைக்க வேண்டிய கட்சித் தலைமை, ஆட்சித் தலைமையை பறிப்பதற்கு பெயர்தான் திமுகவின் அகராதியில் சமூக நீதியா? திமுக என்ற அரசியல் கட்சியின் தலைவராக, திமுக ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சராக, என்றாவது ஒருநாள், கருணாநிதி குடும்பத்தைச் சாராத ஒருவர் வர முடியும் என்று அக்கட்சியைச் சேர்ந்தவர்களால் கூற முடியுமா?

திமுக தலைவர் பதவி, முதலமைச்சர் பதவிதான் ஒரு குடும்பத்திற்கு என்றாகி விட்டது. சமூக நீதி, சமூக நீதி என மேடை தோறும் முழங்கும், அதற்காக அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பை நடத்தும் திமுக, சமூக நீதியை ஓரளவுக்குவாவது நடைமுறைப்படுத்த துணை முதல்வராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்குமா? அல்லது உள்துறை, நிதி, வருவாய், தொழில், பொதுப்பணி போன்ற மிக முக்கிய துறைகளின் அமைச்சர்களாக பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் நியமிப்பாரா? வாய்ப்பிருந்தும் இதனைச் செயல்படுத்துவதில் திமுகவுக்கு என்ன தயக்கம்?

இப்போது அமைச்சராக இருக்கும் மகன் உதயநிதி எந்த நேரத்திலும் துணை முதல்வராக்கப்படலாம் என திமுகவினரே பேசிக் கொள்கின்றனர். மகனுக்குப் பதிலாக, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை ஸ்டாலின் துணை முதலமைச்சராக்கி, சட்டப்பேரவையில் தனக்கு அருகில் அமர வைக்க வேண்டும். அதுதான் உண்மையான சமூக நீதியாக இருக்க முடியும். கிடைக்கும் மேடைதோறும் சமூக நீதி, சமூக நீதி என முழங்கினால் மட்டும் சமூக நீதி கிடைத்து விடாது. பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை துணை முதலமைச்சராக்கி விட்டு, அதன்பிறகு சமூக நீதி பற்றி பேசினால், வீடு தேடி சென்று ஸ்டாலினை பாராட்ட தயாராக இருக்கிறேன்.

"சமூக ரீதியாக, கல்வி ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களை கைதூக்கி விடுவதுதான் சமூக நீதி. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி, உயர் ஜாதி ஏழைகளுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய பாஜக அரசு வழங்கி விட்டது. ஏழைகள் என்றால், அனைத்து ஏழைகள் என்றுதானே இருக்க வேண்டும். அது என்ன உயர் ஜாதி ஏழைகள்?” என, ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

10 சதவீத இட ஒதுக்கீடு என்பது உயர் ஜாதி ஏழைகளுக்கானது அல்ல. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கானது (EWS). இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத சமூகத்தைச் சேர்ந்த ஏழைகள் இதனால் பயன்பெறுவார்கள். இதனை மறைத்து விட்டு அரசியலுக்காக பேசியிருப்பது அவர் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல.

சமூக நீதியில் பெண்ணுரிமையும் ஓர் அங்கம். இதனை ஸ்டாலின் அவர்களே பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால், வாரிசு அரசியலில் கூட, மகளை விட்டுவிட்டு, மகனைதான் அமைச்சராக்கியிருக்கிறார். வாய்ப்பு மறுக்கப்பட்ட, வாய்ப்பே கிடைக்காது என்ற நிலையில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதுதான் சமூக நீதி. அதனை செய்துவிட்டு இனி, சமூக நீதி பற்றி முதலமைச்சர் பேச வேண்டும்

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...