கோவை கவுண்டம்பாளையம் அருகே ரூ.45 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு கட்டிட பணியை முடிக்காமல் இழுத்தடித்து வந்த கன்ஸ்டிரக்ஷன் நிறுவன உரிமையாளர் மீது அளித்த புகாரை வாய்த்தகராறு என பதிவு செய்து துடியலூர் போலீசார் அலைக்கழித்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிருந்தா என்பவர் மனு அளித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டம் துடியலூர் காவல்துறையினர், புகாரை தவறாக பதிவு செய்து அலைக்கழித்ததாக இளம்பெண் ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிருந்தா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நல்லம்பாளையம் பகுதியில் உள்ள தனது சொந்த நிலத்தில் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் பணியை தொடங்கியுள்ளார். இதற்காக சூலூர் பகுதியை சேர்ந்த அசோக் குமார் என்பவரை கட்டிடம் கட்ட நியமித்துள்ளார்.
இந்நிலையில், அசோக்குமார் என்பவர் உப்பிலிப்பாளையம் பகுதியில் ஒரு கன்ஸ்டிரக்ஷன் நிறுவனம் நடத்தி வருகிறார். நல்லாம்பாளையத்தில் கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் பிருந்தாவின் தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து அசோக் குமார் கட்டிடம் கட்டுவதை இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.
தற்போது வரை சுமார் 45 லட்சம் ரூபாய் அவரிடம் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் கட்டிட பணிகளை முடிக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதுகுறித்து துடியலூர் காவல் நிலையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.
ஆனால் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிருந்தா, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பிருந்தா கூறியதாவது,
புகார் அளிக்கப்பட்டு சுமார் 2ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது இதற்கு காவல் நிலையம் மூலமாக, தீர்வு காண இயலாது. நீதிமன்றத்தின் வாயிலாக மட்டுமே தீர்வு காண முடியும் போலீசார் தற்போது கூறுகின்றனர்.
இதனை முன்பே தெரிவித்து இருந்தால் நான் இத்தனை நாட்களாக அலைந்து இருக்க வேண்டியது இல்லை. இடைப்பட்ட இந்த நாட்களில் தன்னை விசாரணைக்காக அழைத்து விட்டு, தங்களதுகட்டிடத்தில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்றனர்.
மேலும் பண மோசடி குறித்தான இந்த புகாரை வாய் தகராறு என பதிவு செய்துள்ளனர்.மாவட்ட ஆட்சியர் தனக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.