திருப்பூர் ஆண்டிபாளையம் வாய்க்காலில் விழுந்து காணாமல் போன நண்பரான சஞ்சய்(19), என்பவரை கண்டுபிடித்து தரக் கோரி சக மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர்: ஆண்டிபாளையம் வாய்க்காலில் விழுந்து மாயமான நண்பரை கண்டுபிடித்து தரக்கோரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் நல்லூர் பகுதியைச் சார்ந்தவர் சங்கீதா இவரது மகன் சஞ்சய்(19), திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி நண்பர்களுடன், திருப்பூர்-தாராபுரம் சாலையில் உள்ள ஆண்டிபாளையம் வாய்க்காலில் குளிப்பதற்காகச் சென்றுள்ளார். வாய்க்காலில் நண்பர்களுடன் குளித்த போது திடீரென சஞ்சய் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மேலும் நண்பர்கள் சஞ்சயைக் காப்பாற்ற முயற்சி செய்ததாகவும், ஆனால் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் சஞ்சயை மீட்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறை உதவியுடன் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சஞ்சயைத் தேடினர். ஆனால் வாய்க்காலில் அதிகளவில் நீர் சென்றதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் வாய்க்காலில் தண்ணீரை நிறுத்தி சஞ்சையின் உடலைத் தீவிரமாகத் தேடிக் கண்டுபிடித்து தர வேண்டும் என வலியுறுத்தி சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளுடன் காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவரை விரைந்து மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.
இதனையடுத்து மாணவ-மாணவிகள் கலைந்து சென்றனர். தொடர்ந்து நான்காவது நாளாக மாணவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.