துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் திருப்பூரில் இருந்து ஆல் இந்தியா கேரளா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
திருப்பூர்: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு உதவும் வகையில் திருப்பூரில் இருந்து 5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் வாழ்வாதாரத்தை இழந்தும் உடமைகளை இழந்தும் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஆல் இந்தியா கேரளா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பின்னலாடை பொருட்கள் அனுப்பப்பட்டது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆல் இந்தியா கேரளா முஸ்லிம் கல்ச்சுரல் சென்டர் தலைமை அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை சாபிக் அலி சிகாபுத்தங்கள் துவக்கி வைத்தார்.
இந்த நிவாரண பொருட்கள் முதல் கட்டமாக இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு டெல்லியில் உள்ள தூதரகத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் இது முதல் கட்டமான நிகழ்வு என்றும் தொடர்ந்து துருக்கி, சிரியா மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை உதவி பொருட்களை அனுப்பப்படும்.
இவ்வாறு இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.