திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் தெற்கு உழவர் சந்தையில் வியாபாரிகள் கடைகளை ஆக்கிரமித்து இடையூறு ஏற்படுத்துவதாக கூறி விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தை மற்றும் திருப்பூர் மாநகராட்சி காய்கறி சந்தையில் நீடித்து வரும் பிரச்சனைகளை சரி செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், உடனடியாக பிரச்சனைகளை சரி செய்ய வலியுறுத்தியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். விவசாயிகளை அங்கு வியாபாரம் செய்ய அனுமதிப்பதில்லை, எனவே, வியாபாரிகள் சட்டவிரோதமாக நடத்தி வரும் காய்கறி கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
திருப்பூர் பல்லடம் சாலையில் தென்னம்பாளையம் உழவர் சந்தை முதல் பேருந்து நிலையம் வரை சாலையின் இரு பக்கங்களிலும் உழவர் சந்தை நேரத்தில் வியாபாரிகள் சட்டவிரோதமாக காய்கறி கடைகளை நடத்தி வருகின்றனர்.
இதனை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்தியிருந்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டி இன்று திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளுடன் போலீசார் மற்றும் திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள், தங்களது கோரிக்கைகள் குறித்து வருவாய் கோட்டாட்சியருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.