கோவையில் 33 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளுடன் தப்பி ஓடிய வடமாநில இளைஞரை, துப்புத் துலங்கிய 6 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். துரிதமான செயல்பட்டு கொள்ளையனை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பாராட்டு.
கோவை: கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் தங்க நகை பட்டறை வைத்திருப்பவர் பியூஸ். தங்க நகைகளை ஆர்டர் தருவோருக்கு டிசைன் டிசைனாக ஆபரணங்களை வடிவமைத்து இவர் சப்ளை செய்து வருகிறார். இந்தப் தங்க நகை பட்டறையில் மேற்கு வங்காளம் உள்ளிட்ட வட, வட கிழக்கு மாநிலங்களை சார்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்களில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சதாம் உசைன், பட்டறை தங்க நகைகளை வேறு கடைக்கு ஃபினிஸிங் செய்ய தருகின்ற நகைகளை பெற்று பட்டறையில் ஒப்படைத்து வருவது வழக்கம். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் தங்க நகைகளை ஃபினிசிங் செய்யும் இடத்திலிருந்து கை சங்கிலி, தோடு தங்க நகைகளை பெற்று உரிமையாளரிடம் ஒப்படைக்கவில்லை.
பட்டறை உரிமையாளர் பியூஸ், சதாம் உசைனுக்கு ஃபோனில் அழைத்திருக்கின்றார். சாதாம் உசைனின் ஃபோன் சுவிட்ச் ஆஃப் என்று தெரிவித்திருக்கின்றது. சதாம் உசைன் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது ஆள் இல்லை. உடமைகள் மட்டும் இருந்தது.
நண்பர்களிடம் விசாரித்தபோது, சதாம் உசைன் தங்குகின்ற அறைக்கு வரவே இல்லை என்பது தெரியவந்தது. இது குறித்து சந்தேகமடைந்த பியூஸ், ஆர். எஸ்.புரம் காவல் நிலையத்தில், சதாம் உசைன் 621.660 கிராம் எடையுள்ள தங்க கை சங்கிலி, கம்மல் உள்ளிட்ட தங்க நகைகளை திருடிச்சென்றதாக புகார் அளித்தார். கொள்ளைபோன தங்க நகைகளின் மதிப்பு 33 லட்சம் ரூபாய் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
தங்க நகை பட்டறையின் முன்னாள் ஊழியர் ஒருவரின் தவறான வழி காட்டுதலின் அடிப்படையில் நம்பிக்கையை ஏற்படுத்த நல்லவனாக நடித்து, தங்க நகைகளை திருடி ஓட்டம் பிடித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், துணை ஆணையாளர் சந்தீஸ் மேற்பார்வையில், உதவி ஆணையர் ரவி தலைமையில் எஸ்.ஐ பிரபு, எஸ்.எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தி, ஹெட் கான்ஸ்டபிள் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை கொள்ளையனை தீவிரமாக தேடியது.
மேற்குவங்க மாநிலம் வடக்கு பகுதியில் உள்ள நார்ஜுல் நகர் பகுதிக்குட்பட்ட கிராமம் ஒன்றில் கொள்ளையன் சதாம் உசேன் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இந்த ரகசிய தகவலின் அடிப்படையில், உடனடியாக விமானத்தில் பயணித்த தனிப்படை போலீசார், மேற்கு வங்கம் சென்று தகவல் தெரிந்த ஆறு மணி நேரத்தில் கொள்ளையன் சதாம் உசேனை அதிரடியாக கைது செய்தனர்.
அவனிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 33 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. தங்க நகைகளை கொள்ளை அடித்து தப்பி ஓடிய வடகிழக்கு மாநில இளைஞரை தட்டி தூக்கிய தனிப்படை போலீசாருக்கு காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பாராட்டுத் தெரிவித்தார்.