துணிவு திரைப்பட பாணியில் தாராபுரம் அடுத்த அலங்கியம் கனரா வங்கி கிளையில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டை காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனியார் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தாராபுரம் அடுத்த காந்தி நகரில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவரது மகன் சுரேஷ் (19) தாராபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இளைஞர் சுரேஷ், துணிவு மற்றும் கொரியா பட பாணியில் கனரா வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டு கருப்பு நிற பர்தா அணிந்து கை, துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு (டைம்பாம்) எடுத்துக்கொண்டு கனரா வங்கிக்குள் நுழைந்துள்ளார்.
வங்கி மேலாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி வெடிகுண்டை வெடிக்க வைப்பதாக கூறி மிரட்டி கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதனால் அலங்கியம் பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்ல் நிலவியது.
அப்போது அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் சுரேஷின் மண்டையில் அடித்த நிலையில், பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். அதன் பிறகு அலங்கியம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அங்கு வந்த அலங்கியம் போலீசார் சுரேஷை கைது செய்து அலங்கியம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக தாராபுரம் டிஎஸ்பி தனராசு ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் பர்தா அணிந்து வந்த சுரேஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சினிமா படங்களை பார்த்து பேங்க் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும்.
மேலும், டம்மி கை துப்பாக்கி, டம்மி டைம் பாம், கத்தி மற்றும் கருப்பு நிற பர்தா, ஆகியவற்றை ஆன்லைன் ஷாப்பிங் தளம் மூலம் வாங்கியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சுரேஷை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடிக்கும்போது தலையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்க தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.