கோவையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை மார்ச் மாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
கோவை: தமிழ் வரலாறு மறைக்கப்படுவதற்கு எதிரான போரை நடத்த வேண்டும் என தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கோவையில் உள்ள பி. எஸ். ஜி., கலை அறிவியல் கல்லூரி அரங்கத்தில் “மாபெரும் தமிழ்க்கனவு” என்ற தலைப்பில் பண்பாட்டு பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தொழில்துறை மற்றும் தமிழ் பண்பாட்டு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதனையடுத்து மாணவர்கள் மத்தியில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது,
தமிழின் சிறப்பு குறித்த அற்புதமான தரவுகள் நமக்கு கிடைக்கிறது. ஒரு பொருள் 100 வருடத்திற்கு முன்பு இருந்தால் அது தொல்பொருள். 15 லட்சம் ஆண்டுக்கு முன்பாக தமிழினம் தோன்றியுள்ளது.
பாட புத்தகத்தில் வரும் வரலாறு அது ஒரு விதமானது. பொன்னியின் செல்வன் படத்தை எத்தனை பேர் பார்த்தீர்கள். கீழடி ஊரை எத்தனை பேர் பார்த்தீர்கள். எத்தனை பேர் கேள்வி பட்டீர்கள். பொன்னியின் செல்வன் புதினத்தின் வாயிலாக வந்துள்ள ஆர்வம். வரலாற்று ஆளுமையை எடுத்து சொல்லியுள்ள புதினம், படமாக வரும் போது பார்க்க ஆர்வம் வருகிறது. இளைய தலைமுறைக்கு வரலாறு அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளது.
ஈரோட்டுக்கு அருகே உள்ள கொடுமணலில் கீழடிக்கு மேல் தரவு உள்ளது. நொய்யல் நதி நாகரீகத்தில் கொடுமணல் உள்ளது. கங்கையில் மட்டும் தான் நாகரீகம் இருந்தது என சொல்லப்பட்டு வந்தது. கீழடியில் தான் தமிழ்நாடு நிலப்பரப்பில் வாழ்ந்தவர்கள் எழுத படிக்க தெரிந்தவர்கள் என உள்ளது.
சாம்ராட் அசோகன் காலத்திற்கு முன்பு எழுத படிக்க தெரிந்த இனம் தமிழினம். முதல்வர் இந்த பயணத்தை நிறுத்த கூடாது. வரலாறு மறைக்கப்படுவதற்கு எதிரான போரை நடத்த வேண்டும். கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து வீரன், வங்காளம் வரை சென்று வெற்றி பெறுகிறான்.
அதேபோல தஞ்சை கோயிலை பற்றிய புனைவு தான் ஏராளம். ராஜராஜன் சோழன் கல்வெட்டில் கொடைகளை குறிப்பிட்டுள்ளார். தமிழ் வரலாறு வணிகத்தோடும் உள்ளது. ரோமாபுரி பொருளாதாரத்தை அசைத்து பார்த்துள்ளோம். 2000 ஆண்டுக்கு முன்பே திரைகடல் ஓடி திரவியம் தேடியவர்கள் நாம்.
இவ்வாறு அமைச்சர் தென்னரசு பேசினார்.
தொடர்ந்து மாணவர்களின் சந்தேகங்களுக்கும், கேள்விக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசும்போது, இந்தியாவிலேயே தொல்லியல் சின்னங்கள் தமிழகத்தில் தான் அதிக அளவில் உள்ளது.
அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்களை மார்ச் மாதத்தில் முதல்வர் முன்னிலையில் காட்சிப்படுத்த உள்ளோம். இளைஞர்கள் கூடுமான அளவு தமிழில் பேசுங்கள். அது தமிழுக்கு செய்யும் உதவியாக இருக்கும்.
தொல்பொருள் என்றால் மக்கள் பயப்படுகிறார்கள். இடம் போய்விடுமோ என மக்கள் யோசிக்கின்றனர். அனைத்து இடத்தையும் அரசு எடுக்க முடியாது. கீழடி மாதிரி தேனியில் இருந்து ராமநாதபுரம் செல்லும் பகுதியில் தரவு உள்ளது. ஆனால் இங்கெல்லாம் ஆராய முடியாது.
குறிப்பிட்ட இடங்களை மட்டும் தான் ஆராய முடியும். மக்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். தமிழ் ஒரு போதும் அழியாது. கீழடியில் தமிழை எழுதியவர்கள் சாதாரண மக்கள்.
இவ்வாறு அவர் மாணவர்களுக்கு பதிலளித்தார்.