திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையத்தில் விவசாயி வீட்டில் முகமூடி அணிந்த நபர் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையம் பகுதியில் விவசாயத் தோட்டம் ஒன்றில் முகமூடி அணிந்து உடல் முழுதும் போர்வையால் போர்த்திய நபர் அங்கு திருட முயற்சித்துள்ளார்.
இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதில், முகமூடி அணிந்தபடி திருடர்கள் கேமராவை துண்டித்துவிட்டு வீடுகளை நோட்டமிடுவது பதிவாகியுள்ளது.
ராயர்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவரது விவசாய தோட்டத்தில் கடந்த 31.1. 2023 அன்று நள்ளிரவில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முகமூடி திருடர்கள் நடமாட்டத்தால் ராயர்பாளையம் பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.