பரமசிவம் பாளையத்தில் இருசக்கர வாகன சாவியைத் தரச் சொல்லி வடமாநில தொழிலாளர்கள் உள்ளூர்வாசியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவால் பரபரப்பு.
திருப்பூர்: பெருமாநல்லூர் அருகே உள்ளூர்வாசியிடம், வடமாநில தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்துள்ள பொங்கு பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பரமசிவம்பாளைத்தில் 3000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் தனது மகளைப் பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காகத் தனது இரு சக்கர வாகனத்தில் பரமசிவம் பாளையம் வழியாக வந்த போது எதிர்பாராத விதமாக அங்கு நின்று கொண்டிருந்த வடமாநில தொழிலாளர் மீது மோதியதாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து அங்கிருந்த வடமாநில தொழிலாளர்கள் ஒன்று திரண்டு சம்பத்தைச் சிறை பிடித்து அவரிடமிருந்த பணத்தையும், பெற்றுக் கொண்டு இருசக்கர வாகன சாவியைத் தராமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சம்பத் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவ்வழியாக வந்த இன்னொருவரின் வாகனத்தில் சென்று தனது மகளை அழைத்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பெருமாநல்லூர் போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் மோதிக் கொண்டதாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.