வால்பாறை அருகே ஆற்றில் துணி துவைக்க சென்ற தாய் மற்றும் மகன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: வால்பாறை அருகே ஆற்றில் துணி துவைக்க சென்றபோது தண்ணிரில் அடித்து செல்லப்பட்ட மகனை காப்பாற்ற சென்ற தாயும் நீரில் மூழ்கி இருவரும் பலியாகினர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள சேடல் டேம் குடியிருப்பு பகுதியை சேர்ந்த தம்பதி சிவக்குமார்-முனிய செல்வி. இவர்களது மகன் சுஜித். சிவகுமார் ஓட்டுனராக வேலை செய்து வருகிறார்.
இன்று அவர் கேரளாவிற்கு வாகனம் ஓட்டுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மதியம் சுமார் ஒரு மணி அளவில் முனிய செல்வியும், மகன் சுஜித்தும் ஆற்றுக்கு துணி துவைக்க சென்று உள்ளனர்.
ஆற்றில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் பொழுது மகன் சுஜித் தண்ணீரில் விளையாடிய போது தண்ணீரில் விழுந்து உள்ளார். மகன் விழுந்ததை பார்த்த முனிய செல்வி மகனை காப்பாற்றுவதற்காக இறங்கி உள்ளார்.
அப்போது இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
சிறிது நேரம் பின்பு ஆற்றின் கரையோரம் துணி துவைக்கப்பட்டு உள்ளதை பார்த்த தோட்டத்தில் வேலை செய்தவர்கள், தண்ணீரில் இருவரும் உடல் மிதந்து கொண்டிருப்பதை பார்த்த அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆற்றிற்கு துணி துவைக்க சென்று தண்ணீரில் மூழ்கி தாயும், மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.