கோவை பெரிய தடாகம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் உட்பட 4 பேர் கைது.
கோவை: தடாகம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் இன்று பெரியதடாகம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக தடாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடமான பெரியதடாகம் பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டபோது விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது.

கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ்குமார், ரூபன் பிரசிதன், ஹதீஸ் சாபிர் மற்றும் சிறுவன் உட்பட 4 நபர்களை தடாகம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.