திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடை வாடகை செலுத்தவில்லை எனக்கூறி முன்னறிவிப்பு இல்லாமல், நகராட்சி அலுவலர்கள் துணிக்கடையை பூட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடையை பூட்டினால் தற்கொலை செய்து கொள்வோம் என கடை உரிமையாளர் கூறியதால் பரபரப்பு.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமாக என்ஜிஆர் சாலையில் அண்ணா வணிக வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. வருடா வருடம் மார்ச் மாதம் கடைகள் ஏலத்திற்கு விடப்பட்டு பல்லடம் நகராட்சியினர் வாடகை வசூல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்லடத்தை சேர்ந்த கலையரசன் மற்றும் அம்சவேணி தம்பதியினர் அண்ணா வணிக வளாகத்தில் கடை எண் 7 மற்றும் 8 ஆகிய இரு கடைகளையும் ஏலத்திற்கு எடுத்து கடந்த 30 வருடங்களாக துணிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று திடீரென கடைக்கு வந்த நகராட்சி அலுவலர்கள் இந்த வருடத்திற்கான கடை வாடகை பாக்கி உள்ளதாகவும் அதை கட்ட தவறியதால் கடையை பூட்டி சீல் வைக்கிறோம் என கூறி கடையை பூட்ட முயன்றனர்.
நகராட்சி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கடை உரிமையாளர் கடையை பூட்டினால் தற்கொலை செய்து கொள்வேன் என ஆவேசமாக பேசியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, மொத்த வாடகை பணத்தில் 2 லட்சம் ரூபாய் மட்டும் கடை உரிமையாளர் நகராட்சி அலுவலர்களிடம் செலுத்தியவுடன் மீதி பணத்தை திங்கட்கிழமைக்குள் செலுத்துவதாக கூறியதால் நகராட்சி அலுவலர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
இதுகுறித்து கடை உரிமையாளர் கலையரசன் கூறுகையில், இந்த வணிக வளாகம் கட்டிய ஆண்டு முதல் கடந்த 30 ஆண்டுகளாக இங்கு கடை ஏலத்திற்கு எடுத்து நடத்தி வருகிறேன். திடீரென இன்று நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் 20க்கும் மேற்பட்டோர் கடைக்குள் புகுந்து வாடகை பாக்கிய உள்ளதாக கூறி கடையை பூட்ட முயன்றனர்.
பத்தாயிரம் ரூபாய் இருந்த வாடகை தற்பொழுது 70 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கூடுதலாக கட்டண கழிப்பறை மற்றும் சைக்கிள் ஸ்டாண்ட் ஆகியவற்றை ஏலம் எடுக்கக் கூடாது எனவும் மிரட்டுகின்றனர்.
இன்று வாடகை தொகையை ரூபாய் 2 லட்சம் செலுத்தி உள்ளேன். மீதி பணத்தை செலுத்த பத்து நாள் அவகாசம் கேட்டால் அவகாசம் தர முடியாது என நகராட்சி அலுவலர்கள் கூறுகின்றனர் என்றார்.
வணிக வளாகத்தில் உள்ள 200 கடைகளுமே மார்ச் மாதத்தில் முழு வாடகை தொகையும் செலுத்துவது வழக்கமாக உள்ள நிலையில், கலையரசன் கடையை மட்டும் நகராட்சி அலுவலர்கள் பூட்ட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.