தேங்காயை நேரடிக் கொள்முதல் செய்வதோடு, பாமாயிலுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய்-யை விநியோகம் செய்யவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை: விவசாயிகளின் முக்கியமான தொழில்களில் தென்னை விவசாயமும் ஒன்று. தென்னை விவசாயம் என்பது தேங்காய் உற்பத்தியை கடந்து தென்னை விவசாயம் ஏராளமான உபதொழிலுக்கு வித்திடுகிறது. தேங்காய், தேங்காய் எண்ணெய், தேங்காய் நார், கயிறு தயாரிப்பு, வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு, கல் இறக்க பயன்படுதல், தென்னை மட்டை எரிபொருள் என தென்னை விவசாயம் விவசாயிகளுக்கு பல வகைகளில் பலனளிக்கிறது.
இந்த நிலையில், தென்னை விவசாயத்தை பணப்பயிர் என்றும் பணப்பயிர்களிலேயே முதன்மையான பயிர் என்றும் வேளாண் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். விவசாயிகளுக்கான பொருளாதார மேம்பாடு மட்டுமின்றி விவசாய கூலிகள், தென்னை உப தொழில் மூலமாக ஏராளமானோருக்கான வேலை வாய்ப்பினை தந்து ஏழை எளியோரின் வாழ்வாதாரமாகவே தென்னை விவசாயம் இருந்துவருகிறது.
எட்டுத்திக்கும் தென்னை விவசாயம்,
இந்தியாவில் தென்னை விவசாயத்தில் சிறந்து விளங்குகின்ற மாநிலங்களில் கேரளாவும் தமிழகமும் முதன்மையானதாக இருக்கிறது. தேசிய அளவில் தென்னை உற்பத்தி திறனில் முதலிடம் வகிக்கின்ற தமிழ்நாடு, தென்னை உற்பத்தியில் இரண்டாம் இடமும், பரப்பளவில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விவசாயம் செய்யபடுகிறது.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாம்பழம், ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள், கேரட், முட்டைகோஸ், பீட்ருட் ஆகியவை நீலகிரி மாவட்டத்தில் அதிகம் சாகுபடியாகிறது. ஆனால் அனைத்து பகுதிகளிலும் பயிர் செய்யப்படக்கூடிய விவசாயம் என்ற வகையில், முதலிடம் பிடிப்பது தென்னை விவசாயம். குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை என தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் சுமார் 10 லட்சத்து 84 ஆயிரத்து 116 ஏக்கரில் தென்னை விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
விலை வீழ்ச்சியிலால் விரக்தியில் வேளாண் குடிகள் பணப்பயிரான தென்னை விவசாயம் விவசாயிகளுக்கு நல்ல லாபம் தரக்கூடிய தொழில். ஆனால் சமீபகாலமாக தேங்காய் விலை வீழ்ச்சியினால் தென்னை விவசாயிகள் நஷ்டத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தகவலறிந்த சிம்பிளிசிட்டி சிறப்பு செய்திக்குழு தென்னை விவசாயிகளை நாடியது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈஸ்வரன் மற்றும் நொய்யல் ஆறு குளம் விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகியான திருஞானசம்மந்தனை சந்தித்து கள நிலவரம் தென்னை விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து கேட்டோம்.
அப்போது அவர்கள் கூறியதாவது, 16 ரூபாய்க்கு விற்பனையாகிக்கொண்டிருந்த ஒரு தேங்காயின் விலை தற்போது 3 முதல் 8 ரூபாய்க்கு விற்பனையாகின்றது. இது வருங்காலத்தில் ரூ.2 வரை விலை வீழ்ச்சி ஏற்படும் என சந்தை மதிப்பீட்டாளர்கள் கணிக்கின்றனர்.
அதேபோன்று கொப்பரை தேங்காய் ஒரு கிலோ 105 ரூபாய் 90 காசுகளுக்கு ஒன்றிய அரசாங்காத்தால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் அதன் உற்பத்தி மதிப்பினை கணக்கிட்டால் 142 ரூபாயாக இருக்கிறது.
இந்த விலை விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மரத்திலிருந்து தேங்காய் பறிக்கும் கூலி, மட்டை உரிக்கும் கூலி, உரக் கூலி என செலவுக்கே தற்போதைய தேங்காய் கொள்முதல் மற்றும் விற்பனை விலை போதியதாக இல்லை. இதனால் பணப்பயிரான தென்னையை பராமரிக்க பணம் கிடைக்காமல் தென்னை விவசாயிகள் பெரும்பாலானோர் பரிதவிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர், என்றனர்.
விலை உயர்த்தி தரும்படி மத்திய அரசுக்கு வேண்டுகோள்:
கேரளாவில் தென்னை விவசாயிகளுக்கு உரிய தொகை தரப்படுகின்றது. குறிப்பாக, ஒரு டன் உரித்த பச்சை தேங்காய்க்கு கேரளா 32,000 ரூபாய் பணம் தருகின்றது. கள் இறக்க மாதத்திற்கு ஒரு மரத்துக்கு 700 ரூபாய் தருகின்றது. ஆனால், தமிழ்நாட்டில் அது போன்ற நிலை இல்லை.
தமிழ்நாடு அரசாங்கம் தென்னை விவசாயிகளிடமிருந்து உரித்த பச்சைத் தேங்காயை டன் 40,000 ரூபாய்க்கு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். தென்னை, பனை மரங்களிலிருந்து கள் இறக்க மற்றும் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.
நீரா இறக்கி விற்பனையை குடிசைத் தொழிலாக்க தமிழ்நாடு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசாங்கம் கொப்பரை தேங்காய் கிலோவுக்கு 150 ரூபாய் வழங்க வேண்டும். கொப்பரை கொள்முதலை ஏக்கருக்கு 285 கிலோவில் இருந்து 500 கிலோவாக உயர்த்த வேண்டும் என்று தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.