ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக கிரைண்டர் உற்பத்தி மற்றும் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கோவை கிரைண்டர் உற்பத்தியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கோவை: நாட்டின் மொத்த கிரைண்டர் தேவையில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் பங்களிப்பு செய்கின்றன. தவிர, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட இந்தியர்கள் வாழும் பல்வேறு நாடுகளுக்கு கிரைண்டர்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நேரடியாகவும் மறைமுகமாகவும் கோவை மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் தினசரி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கோவை வெட்கிரைண்டர் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்(கவுமா) தலைவர் சவுந்தரகுமார் கூறியதாவது:

கிரைண்டர்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து கடந்த சில மாங்களுக்கு முன்பு திடீரென 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இதனால், கிரைண்டர்களின் விலையும் அதிகரித்துள்ளது.
தினமும் கோவை மாவட்டத்தில் 5,000 கிரைண்டர்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். தற்போது 1,000 கிரைண்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.
சந்தையில் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. இவை எல்லாவற்றுக்கும்மேல் ரெடிமேட் இட்லி, தோசை மாவு தயாரிப்பு மற்றும் விற்பனை செய்யும் குடிசை தொழில்கள் அதிகரித்துள்ளன. இவை காரணமாக வீட்டு பயன்பாடுக்கான கிரைண்டர் பயன்பாடு குறைந்துள்ளது.
தற்போது வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. எதிர்வரும் மத்திய நிதிநிலை அறிக்கையில் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரியை மீண்டும் 5 சதவீதமாக குறைக்கவும், மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறு மற்றும் சிறு தொழில்கள் வளர்ச்சிக்கு நிதிநிலை அறிக்கையில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம், என்றார்.