திருப்பூரில் சுத்தம் செய்யப்பட்ட நொய்யல் ஆற்றில் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீர் மீண்டும் கலப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி.
திருப்பூர்: சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்குச் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக நொய்யல் ஆற்றில் மீண்டும் கலக்கும் சாயப் பட்டறை கழிவுநீரைத் தடுக்க அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தொடங்கி திருப்பூர், ஈரோடு வழியாகக் கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆறு 158கிலோமீட்டர் பயணிக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சாயச் சலவை பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் காரணமாக நொய்யல் ஆற்றுத் தண்ணீர் மாசு அடைந்தது.
இதனை மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு தற்போது சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் சாயச் சலவை பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக நொய்யல் ஆறு மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு வரக்கூடிய நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நொய்யல் ஆற்றினை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் ரூ.177 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
நடந்து முடிந்த பொங்கல் பண்டிகைக்காக நொய்யல் ஆற்றங்கரையோரம் தூய்மைப்படுத்தி வண்ண ஓவியங்கள் வரைந்து இருபுறமும் காங்கிரீட் தளங்கள் அமைத்து சமத்துவ பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் என மூன்று நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் திருப்பூர் மணியகாரம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் சாயச் சலவை பட்டறையிலிருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்குச் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாகச் சாயச் சலவை பட்டறையிலிருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத சாய ஆலை நீர் நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது.
உடனடியாக இதனை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இல்லையெனில் சாய ஆலையிலிருந்து வெளியேறும் நச்சு தண்ணீர் காரணமாகத் தண்ணீரின் ஆக்ஸிஜன் அளவு குறைந்து தண்ணீரில் உள்ள மீன்கள் மற்றும் அந்த தண்ணீரைப் பயன்படுத்தும் கால்நடைகளுக்கு நோய் பரவும் ஆபத்து இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.