திருப்பூரில் மது போதையில் ஷேர்ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி ஓட்டுநர் ஏற்படுத்திய விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்தார். பொதுமக்களிடம் வசமாகச் சிக்கிக் கொண்டதால் மயக்கம் வந்தது போல் நாடகமாடிய ஷேர் ஆட்டோ ஓட்டுநர் கைது.
திருப்பூர்: மதுபோதையில் ஷேர் ஆட்டோவை இயங்கிய போது ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவி பலியானார்.
திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர்கள் முருகேசன்-சங்காயி தம்பதி. இவர்களது இரண்டாவது மகள் ஜனனி, சிக்கண்ணா அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது குடும்பத்துடன், ஆட்டோ ஓட்டுநர் குணசேகரன் என்பவரின் ஆட்டோவில் மருத்துவமனைக்கு சென்றுக் கொண்டிருந்தனர்.
ஹவுசிங் யூனிட் என்ற இடத்தில் ஆட்டோ சென்றபோது, எதிரே போட்டிப் போட்டுக் கொண்டு வந்த மூன்று ஆட்டோக்களில் ஒரு ஷேர் ஆட்டோ, குணசேகரனின் ஆட்டோ மீது மோதியது. இதில் இரண்டு ஆட்டோக்களும் தலை குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த நான்கு பேரும் காயமடைந்தனர். பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காகத் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடைய கல்லூரி மாணவி ஜனனி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
அதிவேகமாக வந்து விபத்து ஏற்படுத்திய ஷேர் ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து பொதுமக்கள் விசாரிக்கையில், அவர் குடிபோதையில் ஆட்டோவை போட்டிப் போட்டுக் கொண்டு ஆட்டோவை ஓட்டியது தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுனரை சரமாரியாகத் தாக்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருப்பூர் பூத்தார் தியேட்டர் பகுதியைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர் சின்ன துரையை கைது செய்து திருப்பூர் வடக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
குடிபோதையில் ஷேர் ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தி, கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.