திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வட மாநில தொழிலாளர்களை கண்டித்து தென்னை சார்ந்த தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான தென்னை சார்ந்த தொழிலாளர்கள் தேங்காய் உரிக்கும் பணி, தேங்காய் உடைத்தல், தேங்காய்களை வாகனத்தில் ஏற்றுதல், இறக்குதல் மற்றும் தேங்காய் களங்களில் தேங்காய் பருப்பு எடுத்து பக்குவப்படுத்தி நார் பிரித்தெடுக்கும் பணி, உள்ளிட்ட பிரதான பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக, வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் குறைந்த சம்பளத்தில் இந்தப் பணிகளுக்கு அமர்த்தப்பட்டுவருவதால், தமிழக தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறைந்த கூலியை கொடுத்து, விவசாய முதலாளிகள் வட மாநில தொழிலாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்துவதால், தமிழ்நாட்டு தென்னை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, தமிழ்நாட்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தென்னை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம், இ.எஸ்.ஐ.பிடித்தம், பணி பாதுகாப்பு ஓய்வூதிய மருத்துவ காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்னை தொழிலாளர் நல வாரியம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தென்னை சார் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணனை, போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டதொழிலாளர்கள் முற்றுகையிட்டு கோரிக்கை மனுவை அளித்தனர். தங்களது கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் உடுமலை பகுதி தென்னைசார் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.