திருப்பூரில் மத்திய அரசு தொழிலாளர் விரோதப் போக்கை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசி தொழிற்சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
திருப்பூர் குமரன் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும். சிறு, குறு தொழில்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு ரூபாய் 21,000 குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, ஊர்வலமாக சென்ற ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர், தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.