நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பத்தில் மானை, புலி ஒன்று அதிரடியாக வேட்டையாடிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு, காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் அவற்றை காண நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பத்திற்கு வருகின்றனர்.
அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் தங்களது வாகனங்களில் அழைத்து சென்று வனப்பகுதிகளில் உலாவரும் வனவிலங்குகளை காண்பித்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
தற்போது குளிர்காலம் என்பதனால் வனப்பகுதியில் புற்கள் அனைத்தும் காயத் தொடங்கி இருப்பதினால், வனவிலங்குகள் நடமாட்டத்தை எளிதில் காண முடிகிறது. இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் வாகன சவாரி சென்ற சுற்றுலா பயணிகள், அங்கு புலி ஒன்று மானை வேட்டையாடும் காட்சியை நேரடியாக பார்த்து ரசித்துள்ளனர்.
அதை தங்களது செல்போன்களில் படமாகவும் எடுத்துள்ளனர். அதில், புதருக்குள் மறைந்திருக்கும் புலி ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் மானை வேட்டையாடி, அதனை நீண்ட தூரத்திற்கு எடுத்துசெல்வதுபோல் பதிவாகியிருந்தது. மானை புலி வேட்டையாடும் பரபரப்புக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.