டேன் டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக நீலகிரி அடுத்த பந்தலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் டேன்டீ எனப்படும் அரசு தேயிலை தோட்ட கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த தேயிலை தோட்ட கழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாயகம் திரும்பிய தமிழர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது ஆட்குறைப்பு செய்யப்பட்டு சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மேலும் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் தேயிலை தோட்டத்தை வனத்துறைக்கு ஒப்படைக்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கு டேன்டீ தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நீலகிரி அடுத்த பந்தலூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன பொது கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், 1968-ல் பேரறிஞர் அண்ணா-வால் உருவாக்கப்பட்ட தேயிலைத் தோட்ட நிலங்களை வனத்துறைக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை அதை முன்னெடுத்து தான் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
நீண்ட காலமாக தாயகம் திரும்பிய நமது மக்கள் டேன் டீ தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வரும் நிலையில் தற்போது டேன் டீ -யை வனத்துறைக்கு கொடுப்பதன் மூலம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தையும், வேலை வாய்ப்பை இழக்க நேரிடும்.
அதற்கு நிர்வாகம் தான் பொறுப்பு. தொழிலாளர் மக்கள் பொறுப்பேற்க முடியாது. 2,100 பேரை பணி நீக்கம் செய்துவிட்டு ஆட்கள் பற்றாக்குறை என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு மீண்டும் டேன் டீ-யை நடத்த வேண்டுமென்பது எங்களின் கோரிக்கை. அதற்காகத்தான் தொடர்ச்சியாக மக்கள் போராடி கொண்டிருக்கின்றனர்.
டேன் டீ தொழிலாளர்கள் நாளொன்றுக்கு கூலியாக கேட்பது 425 ரூபாய். ஒப்பந்தக் காலம் முடிந்தால் தேயிலை தோட்ட நிலங்கள் வனமாக மாற்றப்பட கூடாது, என்றார்.