தாராபுரம் அடுத்த ராமபட்டினம் பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற்ற 2ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்ற 40 காளைகளில் 35 காளைகளை அடக்கிய வீரர்களுக்கு ரொக்கம் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமபட்டினம் கிராமத்தில் பொங்கல் திருவிழாவையொட்டி 2ஆம் ஆண்டு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
ஆர்.பி.எம் ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டு போட்டியில், ராமபட்டினம், காளிபாளையம், மேட்டு வலசு, சீராம் பாளையம், தாளக்கரை, காட்டூர், ஆற்றுக்கால் புதூர், கரையூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 40 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொண்டன.
இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் ஒவ்வொரு மாடுகளையும் அடக்குவதற்கு 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டன. மாடுகளை அடக்குவதற்கு 9 பேர் கொண்ட குழுவினருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த போட்டியில் 5 மாடுகளை தவிர மற்ற 35 மாடுகளை வீரர்கள் அடக்கினர்.
இந்நிலையில், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் ரொக்க பணம் மற்றும் அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் வழங்கப்பட்டது.
இதில் ஆர்பிஎம் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் சேகர் தலைமையில், துணைத் தலைவர் கார்த்திக் கண்ணன். செயலாளர் மலர்வண்ணன். பொருளாளர் கோபிநாத். ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.