நொய்யலைப் பாதுகாக்க முதல்வர் அறிவிப்பு வெளியீட்டு அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்று கோவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை பீளமேடு பகுதியில் உள்ள பத்மாவதி அம்மன் கலாச்சார மையத்தில் பசுமைத்தாயகம் என்ற அமைப்பு நடத்திய நொய்யல் ஆற்றை மீட்போம் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்வில் சிறு துளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன், தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் தெய்வசிகாமணி, பசுமைத்தாயகம் செயலாளர் அருள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய அன்புமணி ராமதாஸ், நொய்யல் ஆற்றைக் கெடுப்பதற்கு நாம் தான் காரணம். தமிழகத்தில் உள்ள முக்கிய ஆறு காவிரி. இது மொத்தம் உள்ள எட்டு கோடி மக்களில் ஐந்து கோடி மக்கள் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் தேவையான நீர் கொடுக்கிறது.
பவானியைக் காப்போம் என்ற சைக்கிள் விழிப்புணர்வை 1999ஆம் ஆண்டு ராமதாஸ் மேற்கொண்டார். இயற்கை வளங்களைப் பாதுகாத்து நமது சந்ததிகளுக்குக் கொடுப்பது நமது கடமை. நாற்பது ஆண்டுகளுக்கு முன் நொய்யல் தண்ணீரை அள்ளிக் குடிக்கும் அளவிற்குத் தண்ணீர் இருந்தது. சேர, சோழ, பாண்டிய ஆகிய மூன்று மன்னர்களும் சேர்ந்து பாதுகாத்த ஒரே ஆறு நொய்யல் ஆறு.
மான்செஸ்டர் ஆப் இந்தியா எனக் கோவை பெருமையாக இருக்கிறது. வெள்ளிங்கிரி மலையிலிருந்து மரங்களை வெட்டித்தான் நகரத்தை உருவாக்கினார்கள். மரங்களை வெட்டத் தொடங்கியதிலிருந்து நொய்யல் அழியத் தொடங்கியது. நொய்யலை மீட்டெடுப்போம் என்பதை வெள்ளிங்கிரியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடக்கூடாது என விவசாயிகள் போராடுவது என்பது ஒரத்துப்பாளையம் அணையில் மட்டும் தான் நடக்கிறது. கோவையில் செல்கின்ற திடக்கழிவுகளால் தான் நொய்யல் பாதிக்கிறது.
என்னிடம் ஆட்சி அதிகாரம் இருந்திருந்தால் இதை ஒரே கையெழுத்தில் சரிசெய்ய முடியும். இதனைத்தொடர்ந்து நொய்யலைக் காப்போம் என அரசியல் கட்சியினர் வருவார்கள், அவர்கள் வர வேண்டும். நீர் மேலாண்மை இல்லையென்றால் எதிர்காலம் கிடையாது.
மேகமலை, வெள்ளி மலையில் காட்டை அழித்து எஸ்டேட் ஆக்கியதால் வைகை அணைக்குத் தண்ணீர் வருவதில்லை. அரசியல் எதிர்ப்புகள் இருந்தாலும் அதை மீறி நாம் செய்வோம். நிச்சயமாக நம்மால் முடியும் என்ற நம்பிக்கையில் வந்துள்ளேன்.
நான் அடையாளத்துக்கோ, விளம்பரத்துக்கோ அரசியல் செய்பவன் கிடையாது. உணர்வுப்பூர்வமாக அரசியல் செய்பவன். தன்னம்பிக்கையால் தான் கொங்குக்கு வந்துள்ளேன். நொய்யலைக் காப்பற்ற வேண்டும், என்றார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். கொங்குக்கு மையம் நொய்யல் ஆறு. இன்று மாசுப் பிரச்னை மற்றும் பலவகையான பிரச்னைகளால் மிக மோசமான நிலையில் இருக்கிறது. இதற்கு முன்பு பலர் இந்த முயற்சியில் ஈடுபட்டார்கள், ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசு முன்வர வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நொய்யல் ஆற்றைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.