கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பிராமணர் சங்க மாநாட்டிற்கு பின்னர் பேசிய நாராயணன், சமூக வலைத்தளங்களில் பிராமணர்களை இழிவாக பேசும் நபர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
கோவை: கோவை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட மாநாடு கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநில தலைவர் நாராயணன் கலந்து கொண்டார். தரமான கலாச்சாரம் மற்றும் பண்பாடு பாதுகாத்தல், இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லுதல், சங்கத்தின் சேவைகளையும் சாதனைகளையும் வெளிப்படுத்துதல், மகளிர் நலன் மற்றும் அவர்களை வலிமைபடுத்துதல் இந்த மாநாட்டின் நோக்கமாக இருந்தது.
மேலும், வணிகம் மற்றும் தொழில் முனைவோர் பலம் பேணுதல், சமூகத்தின் அனைத்து உட்பிரிவுகளையும் சங்கத்தில் இணைய செய்தல், உயர்கல்வி ஆலோசனை மற்றும் வேலை வாய்ப்பு தொழில் முனைவோர் ஆலோசனை, பிரம்மா சமுத்திரத்திற்கு அனைவருக்கும் சென்றடையும் நோக்கத்தில் இந்த மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு பின்னர் மாநில தலைவர் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிராமணர்களை இழிவாக பேசும் நபர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்ததை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அறநிலையத்துறை கோவில்களில் தன்னாட்சி வாரியம் அமைக்கப்பட வேண்டும். கேரளா அரசு போல நலிந்தோர்க்கு நலவாரியத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், டாக்டர் அஸ்வின் மோகன், பேராசிரியர் ராம சீனிவாசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.