கோவை கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக சார்பாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் தலைமையில், திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: தமிழக அரசு சொத்துவரி, பால் விலை, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியதைக் கண்டித்து, பல்வேறு கட்டங்களாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி கோவை மாவட்டத்தில் ஜனவரி 3ஆம் தேதி பேரூராட்சி பகுதிகளிலும், 5ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும், 6ஆம் தேதி நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே 2ம் கட்ட போராட்டமானது நடைபெற்றது.
அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசின், சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, மற்றும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவதி நிலையில் உள்ள சாலை பராமரிப்பு, மின்விளக்குகள் பராமரிப்பு போன்றவற்றில் உள்ள அரசின் குறைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், தாலிக்கு தங்கம் ரத்து, மாணவர்களுக்கு மடிகணினி ரத்து, மாணவர்களுக்கான மிதிவண்டி ரத்து, மகளிர்களுக்கு வழங்கப்பட்ட அம்மா மானிய விலை ஸ்கூட்டர் ரத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் ரத்து, ஏழை, எளிய மக்களுக்கான அம்மா மினி கிளினிக்குகளை மூடியது, அம்மா உணவகங்களை தொடர்ந்து மூடிவருவது போன்ற கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலதிட்டங்களை அரசியல் காழ்புணர்ச்சியுடன் முடக்கியதாக கூறி திமுக அரசை கண்டித்தும், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஒன்றிய செயலாளர்கள் கே.வி.என்.ஜெயராமன், கோவனூர் துரைசாமி, ஊராட்சி தலைவர்கள் ரவி, ரமேஷ், ரங்கராஜ், தடாகம் செளந்திரவடிவு ஆனந்தன், கட்சி முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.