கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சிஐடியு ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
கோவை: நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட சிஐடியு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக 3,000 ரூபாய் வழங்கிட வேண்டும்.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் உயர்த்தப்பட்டுள்ள அனைத்து உதவி தொகைகளை போலவே கட்டுமான வாரியத்திலும் உயர்த்தி தர வேண்டும், அனைத்து நல வாரியங்களுக்கும் நிதி வரவை உருவாக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும் தங்களது கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்ல வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு கோவை மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம், சுமைப்பணி தொழிலாளர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் உள்ளிட்டவற்றை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.