கோவை மாநகராட்சி பந்தய சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீரை சேகரிக்க 25 இடங்களில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இன்பில்ட்ரேஷன் கேலரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை: கோவை மாநகராட்சியில் மழை நீரை சேகரிக்கும் நோக்கில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் தொட்டி மற்றும் இன்பில்ட்ரேஷன் கேலரி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது,
கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் பந்தய சாலை பகுதியில் மாதிரி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பந்தய சாலை பகுதியில் பெய்யும் மழைநீரை இப்பகுதியிலேயே சேகரிக்க ஏதுவாக ஜெர்மன் தொழில் நுட்பத்தில் சுமார் 1 கிலோ மீட்டர் நீளத்தில் மழைநீர் உட்புகும் நாளங்கள் கொண்ட கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 25 இடங்களில் சாலைகளில் ஓடும் மழைநீரை சேகரிக்கும் வண்ணம் இன்பில்டரேசன் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மழைநீர் சேகரிப்பு தொட்டி ஜெர்மன் தொழில் நுட்பத்தின் மூலம் பந்தய சாலை, சாவித்திரி சண்முகம் சாலை சந்திப்பாகிய ஸ்டேன்ஸ் சந்திப்பு பகுதியில் தற்போது மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இவ்வாறு அமைக்கப்பட்டுவரும் மழைநீர் சேகரிப்பு தொட்டியின் மேற்புறத்தில் பசுமை புல்வெளிகள் கொண்ட தீவுத்திடல் அமைக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இப்பணிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.