சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை சேலத்தில் தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு.
கோவை: உருமாறிய கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் சர்வதேச விமான நிலையங்களில் “ 2 சதவீத ரேண்டம் “ முறையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு, சிங்கப்பூர் மற்றும் சார்ஜாவில் இருந்து 9 சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது. அதில் 1,357 பயணிகள் வந்துள்ளனர். அவர்கள் 2 சதவீதம் 64 பேர் ரேண்டம் முறையில் பரிசோதனை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து அவர் சேலம் மாவட்டத்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மேலும் சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே அவருடன் விமானத்தில் வந்த பயணிகளும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.