ஆளுங்கட்சியை சேர்ந்த நபர் மூலம் 56 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டிய பெண்கள் வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் வெள்ளலூர் வள்ளியம்மைபுரம் பகுதியை சேர்ந்த சுமார் 86 குடும்பத்தினர் இலவச வீட்டுமனை பட்டா வழங்கிக் கோரி விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், விண்ணப்பித்திருந்த 86 மனுக்களில், 56 நபர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது என்றும் விண்ணப்பித்த மீதி 30 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை என்று கூறி வெள்ளலூர் பேருந்து நிறுத்தம் அருகே பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து பேசிய பெண்கள், ஆளுங்கட்சியை சேர்ந்த நபர் மூலம் 56 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுடன் விண்ணப்பித்த எங்களுக்கு பட்டா வழங்கவில்லை, எனவே, விண்ணபித்த தங்களுக்கும் வீட்டுமனை பட்டா உடனடியாக வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போத்தனூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பட்டா வேண்டி பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு ஈடுபட்டதால் வெள்ளலூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.