கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருடன் சாமி தரிசனம் செய்த பின் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வெற்றி பெறும் என்றார்.
கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலுக்கு வந்த பாஜக தலைவர்களுக்கு நூற்றுக்கு மேற்பட்ட பாஜக தொண்டர்கள், மேளதாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர். இந்நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் வருவதற்கு காலதாமதமானதால் அவர் பங்கேற்க இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதாக இருந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்ட பனி மூட்டத்தின் காரணமாக அவரது வருகை காலதாமதம் ஆகியுள்ளது.
எனவே, நாங்கள் கோவிலுக்கு வந்து தமிழக மக்கள், இந்திய மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தோம். இன்று மாலை மேட்டுப்பாளையம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
பாஜக தேசியத் தலைவர் நட்டா வந்தவுடன் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும். பாஜக தேசியத் தலைவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இந்த பயணத்தை கோவை, நீலகிரியில் இருந்து துவங்க உள்ளார்.
பாஜக எந்த அளவிற்கு வலுப்பெற்றுள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, பாஜகவை பொறுத்தவரை ஏற்கனவே கோவையில் ஒரு எம்.எல்.ஏ உள்ளார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் கவனம் செலுத்தி வருகிறார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அடிப்படை குறைகளை பெரும் அளவுக்கு தீர்த்து வருகிறார். மேலும் இப்பகுதியில் பாஜக ஆதரவு அதிகம் உள்ள தேசியம் மிகுந்த பகுதி என்பதால் பாஜக தேசிய தலைவர் நட்டாவின் வருகை மேலும் பாஜக வலுப்பெற வழிவகுக்கும்.
பொதுவாக, பாஜக தேசியத் தலைவர்கள் வந்தால் அதிமுக தலைமை வழக்கமாக சந்திப்பார்கள். ஆனால், இம்முறை யாரும் சந்திக்காதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, அதிமுகவை பொறுத்தவரை முன்கூட்டியே தேதி அறிவிக்கப்பட்டு அவர்களது கூட்டத்தை நடத்தி வருகின்றனர். பாஜகவினரின் நிகழ்ச்சி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தான் ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோர் கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக கோட்டை ஈஸ்வரன் கோவில் மற்றும் கோனியம்மன் கோவில் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இயங்கி வரும் 50க்கும் மேற்பட்ட புத்தக கடைகள் துணிக்கடைகள் அடைக்கப்பட்டன.