கோவைப்புதூர் தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்க நின்றிருந்த 5 பேர் கொண்ட கும்பலில், மூன்று பேரை போலீசார் மடக்கி பிடித்து, அவர்களிடம் இருந்து 1. 250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சுந்தராபுரத்தை சேர்ந்த இருவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கோவை: கோவை மாநகரம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை தடுக்க மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனையை தடுக்க சிறப்பு தணிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவைப்புதூர் அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர், முருகன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கோவைப்புதூர் தனியார் கல்லூரி அருகே ஐந்து இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்டதும் 5 பேரும் தப்பி செல்ல முயன்றுள்ளனர். அப்போது, போலீசார் மூன்று பேரை மடக்கி பிடித்து சோதனை செய்து போது, கஞ்சா வைத்திருந்து தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 1.250 கிலோ கஞ்சா மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் மதுக்கரை பகுதியை சேர்ந்த ரகு கிருஷ்ணன் (22) அஜித்குமார் (25)குனியமுத்துரை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் (21) என்பது தெரியவந்தது.
மூவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தப்பிச் சென்ற சுந்தராபுரத்தை சேர்ந்த கௌதம் மற்றும் ஹரிஹரன் என்ற இருவரை தேடி வருகின்றனர்.