திருப்பூர் அடுத்த அழகுமலை பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதால், விளைநிலங்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அழகுமலை ஊராட்சிக்கு உட்பட்ட நாடார் காலனி மற்றும் கிறிஸ்டியன் காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் ஆடு, மாடு மேய்ப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். அதேபோல் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் இலவச ஆடு வளர்ப்பு திட்டத்தில் சுமார் 50 குடும்பங்கள் ஆடுகளை பெற்று மேய்ச்சல் நிலத்தில் தான் மேய்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே தற்போது அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பாக இப்பகுதியில் விழா நடத்துவதற்கு பந்தல் அமைத்து கால்கோல் விழா நேற்று நடத்தி உள்ளனர்.
இந்நிலையில், இப்பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் பட்சத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, வருடம் முழுவதும் பசுமை பாதிக்கப்பட்டு ஆடு மாடுகளுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும் எனக் கூறி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை விதிக்க கோரி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜல்லிக்கட்டுக்கு வரும் நபர்கள் மது அருந்திவிட்டு அப்பகுதி குடியிருப்பு பகுதி மக்களிடம் மது போதையில் ரகளை ஈடுபடுகின்றனர். இதனால் அப்பகுதி பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தாங்கள் அனைவரும் பட்டியல் இன மக்கள் என்பதால் உயர் சாதியினர் ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என்று அடக்கு முறையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் ஆடு மாடுகளின் நலன்களை கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்தாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.