பல்லடம் சாலை சந்தப்பேட்டை அருகே உள்ள குடோனில் நடத்திய அதிரடி சோதனையில் பல லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்காவை கைப்பற்றிய போலீசார், குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.
இதன் அடிப்படையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் இன்று தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்லடம் சாலை சந்தப்பேட்டை அருகில் உள்ள குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் குடோனில் இருந்த 274 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த தளராம் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களிலும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் இருக்கிறதா என்பது குறித்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.