பல்லடம் அருகே முருகன் மில் மற்றும் தெற்குபாளையம் பகுதியில் வாகன சோதனையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 வடமாநில இளைஞர்கள் உட்பட 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல்.
திருப்பூர்: தமிழகம் முழுவதும் கஞ்சா பயன்பாட்டை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காவல்துறையினரும் கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்கள், விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள முருகன் மில் பகுதியில் பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே பையுடன் வந்த 3 வடமாநில இளைஞர்கள் போலீசாரை கண்டதும், தப்பி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார், பையை சோதனை செய்து பார்த்த பொழுது அதில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த கமலேஷ் குமார், அசோக்ராஜ் மற்றும் 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் திருப்பூர் குப்பாண்டம் பாளையம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி கஞ்சா, கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதேபோல் பல்லடம் தெற்கு பாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது நொச்சிபாளையத்தில் வசித்து வரும் கிஷோர் காந்தி, அபிஷேக் சுராஜ், லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த சஞ்சய் மற்றும் திருப்பூர் ஆண்டிபாளையத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் ஆகியோர் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் உட்பட 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2.5 கிலோ அளவிலான கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட 7 பேரையும் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.