கோவை சூலூரில் நடைபெற்ற தென்னை விவசாயிகள் கோரிக்கை மாநாட்டில் தேங்காய் கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், டெல்லியில் விவசாயிகள் போராடியது போல் உழவர் தினத்தன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றம்.
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடு இன்று நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற இந்த மாநாட்டை இந்திய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத், தமிழக விவசாய பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர் ஈசன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.
இந்த மாநாட்டில், தென்னை விவசாயிகளின் பல நாள் கோரிக்கைகளான தேங்காய் கொள்முதல் விலையை ரூபாய் 150 இருந்து ரூபாய் 250 ஆக உயர்த்த வேண்டும், கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி, நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை, தென்னைக்கு பரவும் வாடல் நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து மாநாட்டில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர் ஈசன் பேசியதாவது, தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மத்திய மாநில அரசுகளை கண்டித்து, டெல்லியில் விவசாயிகள் கடந்தாண்டு போராடியதை போல 2023ஆம் ஆண்டு உழவர் தினத்தன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.