மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை அரசு மருத்துவ கல்லூரி முதலாம் ஆண்டு இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின், ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2.5 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்ட கட்டிடங்கள் மற்றும் கல்லூரி தமிழ் மன்றத்தையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
அதேபோல, CSR திட்டத்தின் கீழ் 1 கோடியே 80 லட்சம் மதிப்பில் புதுபிக்கப்பட்ட குழந்தைகள் அவரச கால பராமரிப்பு பிரிவு, குழந்தைகள் பிரிவு, தீவிர அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் ரூபாய் 70 லட்சம் செலவில் மருத்துவ உபகரணங்களையும் துவக்கி வைத்தனர்.
அதேபோல, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 2.20 கோடி மதிப்பில் CT ஸ்கேன், 25 லட்சம் மதிப்பில் உயர் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் சூலூர் அரசு மருத்துவமனையில் 12 படுக்கைகளுடன் கூடிய அவரச சிகிச்சை பிரிவு கட்டிடம், மற்றும் நவீன உயிர் காக்கும் கருவிகளை பயன்பாட்டிற்கு காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தனர்.
பின்னர், ஜமீன் ஊத்துக்குளி, 4 வீரபாண்டியில் செவிலியர் குடியிருப்பு கட்டிடம் வி.காளியாபுரம், பூராண்டம்பாளையம், போடிப்பாளையம், எம்.ஜி.புதூர், அய்யம்பாளையம், சின்ன நெகமம் ஆகிய பகுதிகளில் துணை சுகாதார நிலைய கட்டிடங்கள், சந்திராபுரம், ரெட்டியாரூர், ஆழியார் நகர் ஆகிய இடங்களில் புறநோயாளிகள் பிரிவை திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.